Monday, November 20, 2017

2. ஒரு நிஜ அம்மா - என் அம்மா!

என் அம்மா எங்களுக்கு (எனக்கு, என் தம்பி, இரு தங்கைகளுக்கு)  அம்மா மட்டும் அல்ல, எங்கள் குடும்பத்தைப் பாதுகாத்து வழி நடத்துவதற்காகக் கடவுளால் அனுப்பப்பட்ட ஒரு தேவதை என்பது என் 13-ஆம் வயதில்தான் எனக்குத் தெரிந்தது.

நானும் என் தம்பியும் கோடை விடுமுறைக்கு எங்கள் பாட்டியின் (என் அம்மாவின் அம்மா) வீட்டுக்குச் சென்று திரும்பியபோது எங்கள் அப்பா கூடத்தில் படுத்திருந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் பக்கவாதத்தால் தாக்கப்பட்டு இடது  கை, இடது கால் செயலிழந்து போனதாக அறிந்து அதிர்ச்சி அடைந்தோம்.

எங்கள் வாழ்க்கையில் அடுத்த இரண்டு ஆண்டுகள் மிகவும் சோதனையான கட்டம். 

ஒரு  கிராமத்தில் இருந்து கொண்டு, பொருளாதார வசதியோ, மருத்துவ வசதிகளோ அதிகம் இல்லாத நிலையில், உதவி செய்வதற்கும் யாரும் இல்லாத சூழ்நிலையில், ஒரு வருடத்துக்கும் மேல் தனியொரு நபராக நிலைமையை என் அம்மா சமாளித்த விதம் பற்றி ஒரு காப்பியமே எழுதலாம்.

எங்கள் அப்பா பிழைக்கவே மாட்டார் என்று எங்களைச் சுற்றி இருந்தவர்கள் எல்லோருமே முடிவு கட்டி விட்ட நிலையில், பல மாதங்கள் கழித்து, அவர் எழுந்து  நடமாடியதை ஒரு அதிசயமாக நினைத்து, அந்த அதிசயத்தின் பின்னணியில் இருந்த என் அம்மாவைக் கண்டு ஊரே வியந்தது!

அந்தக் காலப் பெண்கள் பலரைப் போலவே, என் அம்மா படித்தது ஐந்தாம் வகுப்பு வரைதான். ஆயினும், அந்த நெருக்கடியான கால கட்டத்தில், சமையல், குடும்ப நிர்வாகம், எங்களைப்  பார்த்துக் கொள்ளுதல், என் அப்பாவுக்கு வேண்டியவற்றைச் செய்தல் தவிர, நிதி நிர்வாகத்தையும் அம்மாதான் கவனிக்க வேண்டியிருந்தது.

குடும்பச் செலவுகளைச் சமாளிப்பது தவிர, என் அப்பாவின் மருத்துவச் செலவுகளுக்காக எங்கள் நிலங்கள் சிலவற்றை விற்பதற்கு ஏற்பாடு செய்ததும் இந்த நிதி நிர்வாகத்தில் அடக்கம்.

இந்தக் காலகட்டத்தில் என் அம்மாவின் செயல்பாடுகள் crisis management என்ற கோட்பாடு பற்றிய ஆய்வாக அமையும்! அவரைப் பார்த்து, நானும் குடும்பத்தில் சில பொறுப்புகளை நிறைவேற்றக்  கற்றுக் கொள்ளத்  தொடங்கினேன்.

என் அம்மாவிடம் எனக்கு பிரமிப்பை ஏற்படுத்திய விஷயம் பல்வேறு விஷயங்களைக் கற்பதில் அவருக்கிருந்த ஆர்வம். 

இந்தியப் பண்பாடு, மதம் குறித்த விவரங்கள், புராணங்கள் ஆகியவை பற்றி விரிவாக  அவர் தன் பெற்றோர்களிடமிருந்து - குறிப்பாக, அவருடைய தந்தையிடமிருந்து -  அறிந்து கொண்டிருந்தாலும், விஞ்ஞானம், உலக வரலாறு, நாட்டு நடப்பு, உலக நடப்பு, அடிப்படைப் பொருளாதாரம் போன்ற பல விஷயங்களையும் அறிந்து கொள்ளும் ஆர்வம் அவரிடம் இருந்தது. .

பல வருடங்கள் முயன்று 'ஹிந்து' பத்திரிகையை எழுத்துக் கூட்டிப் படித்தே ஓரளவுக்கு ஆங்கிலப் பத்திரிகைகளைப் படித்துச் செய்திகளைப் புரிந்து கொள்ளும் திறமையை அவர் வளர்த்துக் கொண்டார்.

நான் சிறுவனாக இருந்தபோது, நடு இரவில் என்னை எழுப்பி, முற்றத்துக்கு அழைத்துச் சென்று, முற்றத்துக்கு மேல் தெரியும் ஆகாயத்தில் சில நட்சத்திரங்களைக் காட்டி விளக்குவார். 

குறிப்பாக சப்தரிஷி மண்டலம் என்று அழைக்கப்படும் ஏழு நட்சத்திரங்கள் வரிசையாக ஒரு கோடு போல் அணிவகுத்திருப்பதைக் காட்டி "கொஞ்ச நேரம் கழிச்சு இந்த வால் அந்தப் பக்கம் திரும்பிடும்" என்று பல நாட்கள் விளக்கியது எனக்கு நன்கு நினைவிருக்கிறது. சில சமயம், கொஞ்ச நேரம் கழித்து என்னை எழுப்பி, "இப்ப அந்த வால்  திரும்பியிருக்கு பார்" என்று காட்டுவார்.

அம்மா எப்போது தூங்குவார் என்று பல முறை நான் வியந்திருக்கிறேன். இரவில், நாங்கள் எல்லோரும் தூங்கிய பிறகே தூங்கப் போகும் அவர், காலையிலும் எங்களுக்கு முன் விழித்து விடுவார். இடையில் நள்ளிரவு நட்சத்திர ஆராய்ச்சி வேறு!

பல இரவுகளில் நான் கண் விழித்துப் பார்க்கும்போது அவர் சிம்னி விளக்கை வைத்துக்கொண்டு ஏதாவது பத்திரிகையோ, புத்தகமோ படித்துக் கொண்டிருப்பார். 

சிம்னி விளக்கில் படித்ததற்குக்  காரணம் , மின் விளக்கில் படித்தால் எங்கள் தூக்கம் கலைந்து விடும் என்பது மட்டுமில்லை. மின்சாரக் கட்டணம் அதிகம் ஆகிவிடக்கூடாது என்பதும்தான்!

பள்ளி மாறுவேடப் போட்டிக்காக பாரதி  வேடம் தரித்த
என் மகனுடன் என் அம்மா
 
நாங்கள் (அவரது குழந்தைகள்) வாழ்வில் நல்ல நிலைக்கு வர வேண்டும் என்பது அவருடைய தீவிர விருப்பம், லட்சியம். நன்றாகப் படிக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி எங்களிடம் அடிக்கடி வலியுறுத்துவார்.

எங்களைப் போன்ற நடுத்தர வகுப்புக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு நன்கு படித்து, நல்ல வேலையில் சேர்வதுதான் வாழ்க்கையில் முன்னேற ஒரே வழி என்பதை எங்களுக்கு அலுப்பு ஏற்படும் வரை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பார்.

என் அம்மா, என் அப்பாவுடன் பண விஷயமாகச்  சில சமயம் சண்டை போடுவதைப் பார்த்திருக்கிறேன். சண்டை எல்லாம் பணம் சேமிக்க வேண்டும் என்பதைப்  பற்றித்தான். 

எங்களுக்கு எங்கள் அப்பா விலையுயர்ந்த பொருட்களோ, பிஸ்கட், சாக்லேட் போன்று அந்தக் காலத்தில் ஆடம்பரம் என்று கருதப்பட்ட தின்பண்டங்களோ வாங்கி கொடுப்பதை என் அம்மா விரும்புவதில்லை.

தனக்குப் புடவை, நகை எதுவும் கேட்டு என் அப்பாவிடம் அவர் ஒரு தடவை கூடச் சண்டை போட்டதில்லை. என் அப்பா சிக்கனமாக இருந்து எங்களை நன்கு படிக்க வைக்கப் பணம் சேர்க்க வேண்டும் என்பதுதான் என் அம்மாவின் ஒரே கோரிக்கையாக இருந்தது.

கடின உழைப்பு, சிக்கனம், தன் தேவைகளைக் குறைத்துக் கொண்டு மற்ற குடும்ப உறுப்பினர்களின் தேவைகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பது போன்றவை என் அம்மாவிடமிருந்து நான் கற்றுக் கொண்ட விஷயங்கள் (எந்த அளவுக்குக் கற்றுக் கொண்டிருக்கிறேன் என்று தெரியவில்லை!)

ஓரளவுக்கு வசதியான பொருளாதார நிலைக்கு வந்த பிறகும், என் குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் நான் தாராளமாக இருந்தாலும், அம்மாவிடம் கற்ற சிக்கனம், என் தேவைகளைக் குறைத்துக் கொள்ளுதல் என்ற இரண்டு விஷயங்களையும் பெருமளவு பின்பற்றி வந்திருக்கிறேன்! 

பல்வேறு சிறப்பியல்புகளைக் கொண்ட என் அம்மாவின் குணங்களில் இந்த இரண்டையாவது  பின்பற்ற முடிந்தது பற்றி  எனக்குப் பெருமைதான்!

1972-ஆம் ஆண்டு என் கல்லூரிப் படிப்பு முடிந்து நான் வேலைக்குப் போவதற்கு முன்பே என் தந்தை இறந்து விட்டார். 

என் தந்தையின் மரணச் செய்தி பற்றி அறிந்ததும், என் தந்தை பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டபோது அவருக்கு வியப்பான வகையில் சிகிச்சையளித்து அவரை உயிர் பிழைக்கச் செய்த மருத்துவர் எனக்கு எழுதிய இரங்கல் கடிதத்தில் "உன் தந்தை உடல் நலம் குன்றியிருந்தபோது உன் தாயார் காட்டிய தைரியமும், மன உறுதியும் அசாத்தியமானவை. இப்போது  உன் தந்தை மறைந்து விட்ட நிலையில், உன் தாயாரின் வழிகாட்டுதல் உங்கள் குடும்பத்துக்கு மிகவும்  பயனுள்ளதாக இருக்கும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

அவருடைய கணிப்பு மிகச் சரியாக இருந்தது. நாங்கள் நால்வரும் படித்து முடித்து (அப்போது நான் மட்டும்தான் படிப்பை முடித்திருந்தேன்) வேலைக்குப் போய், திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் நிலைபெறும் வரை ஒரு திறமையான நிர்வாகி போல் எங்களைப் பார்த்துக் கொண்டார் அம்மா. 

அன்பு, அக்கறை, விவேகம், திட்டமிட்டுச் செயல்படுதல் இவை எல்லாம் கலந்ததுதான் அவர் எங்களை வழி நடத்திய வரலாறு.

என் அம்மாவைப் பற்றி நினைக்கும்போது, என் மனத்திரையில் பல்வேறு நினைவுகள் வந்து போகின்றன. 

அவருடைய  ஆழமான சிந்தனை, பொது அறிவு சார்ந்த அணுகுமுறை (common sense approach), துணிவு, உறுதியான எண்ணங்கள்/நம்பிக்கைகள்/கொள்கைகள், 'என்னதான் நடக்கும் பார்க்கலாம்' என்ற மனம் கலங்காத தன்மை, மற்றவர்களுக்குத் தன்னால் ஒரு சிறு அசௌகரியம் கூட ஏற்படக் கூடாது என்ற உறுதி, நேர்மை, நீதி வழுவாத தன்மை இவை அவருடைய அடிப்படைப் பண்புகள். 

அவருடைய பண்புகள் அனைத்தையும் பட்டியலிடுவது என்பது கடலுக்குள் இருக்கும் பொருட்கள் அனைத்தையும் விவரிக்க முயல்வதைப் போல் இயலாத செயல்.

நாங்கள் ஒரு சிறிய கிராமத்தில் குறைவான வருவாயுடன் வாழ்ந்து வந்தபோது, என் அம்மா சொல்லுவார்: "நமக்குச் சொந்த வீடு இருக்கு. நம்ப வயல்ல விளையற நெல்லு நம்ப சாப்பாட்டுக்குப் போதும். வீட்டில மாடு இருக்கு. ஏதாவது பெரிசா நடந்து நம்பகிட்ட தம்படிக்  காசு கூட இல்லாமப் போனாக்கூட, வெறும் மோர் சாதமாவது சாப்பிட்டுக் கொண்டு காலத்தை ஓட்டலாம்!"

அவருடைய இந்த ஆக்கபூர்வமான சிந்தனை என் வாழ்க்கையின் பல நிலைகளில் எனக்கு வழிகாட்டியாக இருந்திருக்கிறது.

நாங்கள் பின்பற்ற வேண்டிய நியாயங்கள், சுயமுன்னேற்றச் சிந்தனைகள், கோட்பாடுகள், வழிமுறைகள் ஆகியவை பற்றி  எங்களிடம் திரும்பத் திரும்பப் பேசுவது பற்றி அவர் அலுத்துக் கொண்டதே இல்லை. சில சினிமாப் பாடல்களிலிருந்து சில வரிகளைக் குறிப்பிடுவார்.

"ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்" என்ற பாடலில் வரும்

"வீட்டை விட்டு வெளிய வந்தா நாலும் நடக்கலாம்
அந்த நாலும் தெரிஞ்சு நடந்துக்கிட்டா நல்லா இருக்கலாம்.
உன்னைக் கேட்டு, என்னைக்கேட்டு எதுவும் நடக்குமா?"

என்ற வரிகளைக் குறிப்பிட்டு, "இதெல்லாம் உங்களுக்காகவே எழுதின மாதிரி இருக்கு!" என்று எங்களைக் கேலி செய்வார். 

அவர் கேலியாகச் சொன்னாலும், இந்த வரிகளை நான் இன்றும் நினைவு கூர்வது அவர் தன்  கருத்துக்களை என் மனதில் எவ்வளவு ஆழமாகப் பதிய வைத்திருக்கிறார் என்பதற்கு ஒரு எடுத்துக் காட்டு.

மற்றவர்களுக்கு உதவி செய்வதில் முன் நிற்பவர் என் அம்மா. ஆனால் தான் ஏமாளியாக்கப்படுவதை பொறுத்துக் கொள்ள மாட்டார். 

ஒருமுறை எங்கள் அண்டை வீட்டிலிருந்து ஒரு சிறுமி என் வீட்டுக்கு வந்து அம்மாவிடம் "அம்மா ரெண்டு ரூபா இருந்தா கேட்டாங்க" என்றாள்.

அவர்கள் ஏழ்மையானவர்கள் இல்லை. எங்களை  விட  வசதியானவர்கள்தான். 

அண்டை வீடுகளில் அவ்வப்போது இது போன்று கைமாற்று வாங்கி ஓரிரு நாட்களில் திருப்பிக் கொடுக்கும் வழக்கம் உண்டுதான். ஆனால் அந்த வீட்டுப் பெண்மணி கடன் வாங்கினால் உடனே திருப்பிக் கொடுக்க மாட்டார். பலமுறை கேட்டுத்தான் கொடுத்த பணத்தைத் திரும்ப வாங்க வேண்டும். 

என் அம்மா அந்தச் சிறுமியிடம், "எங்கிட்ட பணம் இல்ல" என்று சொல்லி அனுப்பி விட்டார்.

அந்தச் சிறுமி சென்றதும், நான் என் அம்மாவிடம், "ஏம்மா! ரெண்டு ரூபா கூட இல்லேன்னு சொன்னா யாராவது நம்புவாங்களா?" என்றேன்.

"ஏண்டா! அவங்ககிட்ட ரெண்டு ரூபா இல்லேன்னுதானே நம்பகிட்ட கேக்கறாங்க? அவங்ககிட்ட ரெண்டு ரூபா இல்லாத மாதிரி, நம்ப கிட்டயும் ரெண்டு ரூபா இல்லாம ஏன் இருக்கக் கூடாது?" என்றார் அம்மா.

அம்மாவின் லாஜிக்கைக் கேட்டு ஒரு நிமிடம் அசந்து போய் விட்டேன்! பொருளாதார விஷயங்களில் அவருடைய விவேகமான அணுகுமுறைக்கு இது ஒரு உதாரணம்.

எங்கள் இலட்சியங்கள் உயர்ந்தவையாக இருக்க வேண்டும் என்பது என் அம்மாவின் விருப்பம். 

அப்போது தினத்தந்தி பத்திரிகை, எஸ் எஸ் எல் சி தேர்வில் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெறும் மாணவன்/மாணவிக்கு ஐநூறு ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கி கொண்டிருந்தது. (அந்தக் காலத்தில் கல்லூரியில் படிக்க ஓராண்டுக்கான கல்விக் கட்டணம் ஐநூறு ரூபாய்க்கும் குறைவுதான்).

நான் அந்தப் பரிசைப் பெற வேண்டும் என்பது என் அம்மாவின் விருப்பம். அந்தப் பணம் கிடைத்தால் என்னைக் கல்லூரியில் படிக்க வைப்பது கொஞ்சம் எளிதாக இருக்கும் என்பதால் அவருக்கு அந்த எண்ணம் தோன்றியிருக்கலாம்.

நான் 8 அல்லது 9 ஆம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தபோதே இந்த எண்ணத்தை என் மனதில் விதைத்து வந்தார் அவர். 

எங்கள் பள்ளியில் ரேங்கிங் முறை கிடையாது. (அன்றைய சூழ்நிலையில், பெரும்பாலான பள்ளிகளில் ரேங்கிங் முறை இருந்ததில்லை என்று நினைக்கிறேன்.) 

மதிப்பெண்களின் அடிப்படையில், நான் என் வகுப்பில் மூன்றாவது அல்லது நான்காவது நிலையில் இருந்தேன் என்றுதான் சொல்ல முடியும். 

ஆயினும் என் அம்மா என் மனதில் விதைத்த விதை கொஞ்சம் கொஞ்சமாக முளை விட்டு வளர்ந்து கொண்டிருந்தது என்று நினைக்கிறேன்!

எஸ் எஸ் எல் சி பரீட்சை துவங்குவதற்குச் சில நாட்கள் முன்பு எங்கள் பள்ளியில் வகுப்புகள் முடிந்து படிப்பதற்கான விடுமுறை (study leave) அறிவிக்கப்பட்டதும் எங்கள் தலைமையாசிரியரின் வாழ்த்துக்களைப்  பெறுவதற்காக அவரைச் சந்தித்தேன்.

எங்களுக்கு ஆங்கிலம், மற்றும் கணக்கு வகுப்பு எடுத்த அவருக்கு என் மீது அதிக அன்பு உண்டு. அதனாலோ என்னவோ, என்னிடம் "பள்ளியில் முதல் மாணவனாக வர முயற்சி செய்" என்று அவர் என்னிடம் ஆங்கிலத்தில் சொன்னார். அவர் அப்படிச் சொன்னதே எனக்கு மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது.

வீட்டுக்கு வந்ததும் என் அம்மாவிடம் என் தலைமை ஆசிரியர் சொன்னதைச் சொன்னேன். என் அம்மா சொன்ன பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது. 

"வாழ்த்தினதுதான் வாழ்த்தினார், ஸ்டேட் ஃபர்ஸ்டா  வான்னு வாழ்த்தக் கூடாதா? வார்த்தையிலே எதுக்கு கஞ்சத்தனம்?"  என்றார் அம்மா! 

இதை அவர் குறைப்பட்டுக்கொவது போல்தான் சொன்னார். அவருடை இலக்கை என் தலைமை ஆசிரியர் குறைத்து விட்டாரே!

பரீட்சை முடிவுகள் வந்ததும், யாரும் எதிர்பாராத வகையில் நான் பள்ளியில் முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றிருந்தேன். என்னால்  இதை நம்பவே  முடியவில்லை. என் அம்மாவின் உந்துதல்தான் என்னுடைய இந்த முன்னேற்றத்துக்குக் காரணம் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.

என் பள்ளி ஆசிரியர்கள், என் நண்பர்கள் என்று பலரும் நான் முதலிடம் பெற்றதைப் பற்றி வியப்படைந்தனர். ஆனால் என் அம்மா, தான் இதை எதிர்பார்த்தது போல், இதை மிக இயல்பாக எடுத்துக் கொண்டார். அவருக்கு மகிழ்ச்சிதான். ஆனால் ஆச்சரியம் இல்லை!

வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் நான் என் அம்மாவின் விருப்பத்துக்கும், ஆலோசனைக்கும் மாறாக நடந்து கொண்டிருக்கிறேன். 

நான் ஐம்பது வயதைத் தாண்டிய பிறகும் அவர் தன் ஆலோசனைகளை எனக்கு வழங்கத்  தவறியதில்லை. என்னுடைய முடிவு புத்திசாலித்தனமானதல்ல என்று அவர் கருதினால் அதை என்னிடம் தெரிவிக்கத் தயங்கியதுமில்லை.

குறிப்பாக என்னுடைய 45ஆவது வயதில் நான் ஒரு நல்ல வேலையை விட்டு விட்டு சொந்தத் தொழில் துவங்கியதை அவர் கொஞ்சம் கூட ஒப்புக் கொள்ளவில்லை. 

என் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கக் கூடிய அளவில் நான் ரிஸ்க் எடுக்கிறேன் என்பது அவருடைய வாதம். ஆயினும், என் வாழ்க்கைக்கு உகந்தது என்று கருதி நான் எடுத்த முடிவை நான் மாற்றிக் கொள்ளவில்லை.

அதற்குப் பிறகு எட்டு ஆண்டுகள் என்னைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்திருக்கிறார். 

நான் சில பின்னடைவுகளைச் சந்தித்தபோது, "அப்பவே சொன்னேனே கேட்டியா?" என்று அவர் ஒருமுறை கூடச் சொன்னதில்லை. கனிவுடனும், கரிசனத்துடனும் 'இப்படிச் செய்யலாமே, அப்படிச் செய்யலாமே!' என்று ஆலோசனைகள் மட்டும் சொல்லுவார்.

இன்றைய நிலையில் நான் எப்படிச் செயல்படுகிறேன் என்று எடைபோட்டுத் தன் கருத்தைச் சொல்ல அம்மா என்னுடன் இல்லை. எங்கேயோ இருந்து கொண்டு என்னைப் பார்த்துக் கொ ண்டிருக்கிறார் என்றுதான் நம்பிக் கொண்டிருக்கிறேன்!

( Reflections from my life என்ற என் வலைத்தளத்தில்  'My mother  Late Vijayavalli Parthasarathy' என்ற தலைப்பில் 22/8/2011 அன்று நான் எழுதிய  ஆங்கிலக் கட்டுரையின் தமிழ் வடிவம்)

No comments:

Post a Comment